கருணாநிதி முதல்வர் பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை: ராமர் குறித்து அவதூறாகப் பேசிய முதல்வர் கருணாநிதி அப்பதவியில் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஈரோட்டில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், ராமர் குறித்துப் பேசினார். அப்போது ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று விமர்சித்திருந்தார்.
இதையடுத்து முதல்வரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பாரதிய ஜன சக்தி தலைவர் ராம தங்கராசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது மனுவில், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசிய முதல்வர் கருணாநிதி, அந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர். எனவே அவர் பதவியில் நீடிக்கத் தடை விதித்து உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்ரமணியன் ஆகியோர், இந்த வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்து விட்டனர்.