போலீஸ்காரரை அடித்ததாக ராப்ரி தேவி மீது வழக்கு
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வந்ததால் தனது மகனின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்காரரை அடித்ததாக முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
லாலு - ராப்ரி தேவி தம்பதியின் மகன்களில் ஒருவர் தேஜ் பிரதாப். இவர் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த திங்களன்று பள்ளி முடிந்த பின்னர் பாட்னாவில் உள்ள சர்குலர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
அவர் வந்த அந்தப் பகுதியில்தான் முதல்வர் நிதீஷ் குமாரின் வீடு உள்ளது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் தர்பாரை நடத்துவது நிதீஷ் குமாரின் வழக்கம். அந்த சமயத்தில், பொதுமக்கள் நிதீஷை சந்தித்து புகார் கொடுக்கலாம்.
இந்த ஜனதா தர்பாரின்போது அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும். மக்கள் வசதிக்காக போலீஸார் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். ஆனால் தேஜ் பிரதாப், தனது காருக்கு வழி இல்லையா என்று கோபமடைந்தார்.
உடனே தனது அம்மாவுக்கு போன் செய்து நிதிஷ்குமார் வருவதால் என்னுடைய காரை போலீசார் விடாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்று சொல்லியுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த ராப்ரி தேவி தனது கட்சி ஆதரவாளர்களுடன் அங்கு விரைந்தார். தனது மகனின் கார் செல்ல அனுமதிக்குமாறு ஆவேசமாக கூறினர். இதையடுத்து அவரின் கார் மட்டும் செல்ல போலீஸ்காரர்கள் வழி விட்டனர்.
அதன் பிறகுதான் பெரும் அமர்க்களமே நடந்தது. மகனின் காரை செல்ல விடாமல் தடுத்த போலீஸ் செக் போஸ்ட்டுக்குச் சென்றார். அவருடன் தொண்டர்களும் உடன் சென்றனர். அங்கு காவலர்கள் பணியின்போது அமர்ந்திருக்கும் கூடாரத்தை ஆவேசமாக ஆட்டிக் கலைத்தனர். இதில் கூடாரத்தின் ஒரு பகுதி கீழே விழுந்தது.
மேலும் போலீஸாரைப் பார்த்து தாறுமாறாக கத்தி திட்டினார். தீபக் குமார் என்ற காவலர் இதுகுறித்துக் கூறுகையில், எனது பெயரைச் சொல்லி கூப்பிட்டு என்னைத் திட்டினார். எனது கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி அதைக் கொண்டு என்னை அடித்தார்.
ராப்ரி தேவியின் மகன் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் அவரை அனுப்பியிருப்பேன் என்றார். இந்த சம்பவம் குறித்து பாட்னா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேசமயம், இந்த சம்பவத்தை ராப்ரி தேவி மறுத்துள்ளார். போலீஸ்காரர்கள்தான் தன்னையும், தொண்டர்களையும் பார்த்து ஆபாசமாக பேசி திட்டியதாக அவர் கூறியுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், திங்கள்கிழமை தோறும் அந்தப் பகுதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி போல இருக்கிறது. சாமான்ய மக்களால் நடமாடவே முடியவில்லை என்றார்.