பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எப்போது?
டெல்லி: குஜராத் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் இப்போதைக்கு பெட்ரோல்-டீசல் விலைகள் உயராது என தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருவதையடுத்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை மற்றும் சமையல் கேஸின் விலைகளை உயர்த்த வேண்டும் என பிரதமரை பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா வலியுறுத்தி வருகிறார்.
இப்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 98 டாலரை எட்டிவிட்டதால் எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.240 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 6.50ம், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 16.42ம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 207ம் உயர்த்த வேண்டும்.
ஆனால், சமையல் எரிவாயுவுக்கும் மண்ணெண்ணெய்க்கும் மத்திய அரசு மானியம் தந்து வருகிறது. அவற்றின் விலையை உயர்த்தினால் பெரிய அளவில் பொது மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.
இதனால் வழக்கமாக பெட்ரோல், டீசல் விலைகளையே கொஞ்சம் ெகாஞ்சமாக உயர்த்தி வருகின்றனர். இப்போதும் இவற்றின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளி முடியும் வரை விலையை உயர்த்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று நடந்த பெட்ரோலிய அமைச்சக கூட்டத்தில், விலையேற்றத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைதக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அடுத்த வாரம் கூட விலை உயர்வு இருக்குமா என்பதும் சந்தேகமே. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் முடிந்த பின்னரே விலைகளை மத்திய அரசு உயர்த்தும் எனத் தெரிகிறது.