ரவுடி 'காட்டான்' சுப்பிரமணி கொலை?
மதுரை: மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காட்டான் சுப்பிரமணியத்தை போலீஸார் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் போட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் காட்டான் சுப்பிரமணி. பங்கர ரவுடி. இவர் மீது 5 கொலை வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 6 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்றவர்.
காட்டான் சுப்பிரமணியை போலீஸார் என்கவுண்டர் வளையத்தின் கீழ் வைத்திருப்பதாக ஒருமுறை பரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் காட்டான் சுப்பிரமணியின் மனைவி கவிதா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
கவிதா, மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கவிதா தாக்கல் செய்துள்ள மனுவில், எனது கணவர் காட்டான் சுப்பிரமணி. இவர் மீது 5 கொலை வழக்கு உள்ளிட்ட 60 வழக்குகள் உள்ளன. 6 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றுள்ளார்.
ஆனால் அவர் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய் வழக்கு என நிரூபணமானதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் பைனான்ஸ் தொழிலிலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் எனது கணவரைப் பிடிக்காத சிலர் அவரைப் பொய்யான வழக்கில் போலீஸில் சிக்க வைக்க முயன்று வந்தனர். இதன் காரணமாக சிவகங்கை காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், கீழவளவு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வேறு எந்த வழக்கும் அவர் மீது நிலுவையில் இல்லை.
இந்த நிலையில் மேலூர் தாலுகா எம்.ஒத்தப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தனது மகள் திருமணத்திற்காக அவருக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 1 லட்சம் கடன் பெற்றார்.
ஆனால் பணத்தை அவர் திருப்பித் தரவே இல்லை. பலமுறை கேட்டும் கூட அவர் பணம் தரவில்லை. மதுரை சரக டிஐஜி ஜெயந்த் முரளியின் நெருங்கிய உறவினர்தான் திருநாவுக்கரசு.
பணத்தைத் திருப்பிக் கேட்டதால் ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு, தனது காவல்துறை செல்வாக்கை வைத்து உயர் அதிகாரிகளுக்கு மொட்டைக் கடிதங்களைப் போட்டார்.
எனது கணவர் திருந்தி வாழ்வதாக கூறி ஐஜிக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தார். தன்னை நிம்மதியாக வாழ விடுமாறும் அவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 13ம் தேதி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயக்குமார் தலைமையில் பெரும் அளவிலான போலீஸார் வாகனங்களில் எங்களது வீட்டுக்கு வந்தனர். அப்போது எனது கணவர் வீட்டில்தான் இருந்தார்.
சில போலீஸார் துப்பாக்கியை கையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். இதைப் பார்த்த எனது கணவர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் மேலூர் இன்ஸ்பெக்டர் பாலாஜி எனது வீட்டுக்குத் திரும்பி வந்து வீட்டிலிருந்த செல்போனை எடுத்துச் சென்றார். போகும்போது சுப்பிரமணியைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று மிரட்டி விட்டுச் சென்றார்.
அதன் பிறகு எனது கணவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் சுட்டுக் கொன்று விட்டார்களா அல்லது சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனரா என்பது தெரியவில்லை.
எனவே எனது கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பழனிவேலு ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி டிஜிபி, கூடுதல் டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை சரக டிஐஜி, மதுரை புறநகர் எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.