50 வருடமாக தீபாவளி கொண்டாடாத அதிசய கிராமங்கள்
திருவாரூர்: திருவாரூர் அருகே கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாத பல கிராமங்கள் உள்ளன.
நாடு முழுவதும் தீபாவளி திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த கிராமங்களில் ஊர் கட்டுப்பாடு காரணமாக தீபாவளியே கொண்டாடப்படுவதில்லையாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரிஷியூர், பச்சக்குளம், பண்டாரஓடை, நன்மங்கலம், வரதராஜபெருமாள் கட்டளை, பனங்களத்தூர் ஆகிய கிராமங்ம் தான் தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்.
மேலும் புதிதாக திருமணம் முடிந்த தம்பதிகளுக்கும் தலை தீபாவளி என்பதே இங்கு கிடையாதாம். குழுந்தைகள், பெரியோர்கள் உட்பட யாரும் தீபாவளிக்கு புதுத் துணி அணிய மாட்டார்களாம்.
இது குறித்து ரிஷியூர் கிராமத் தலைவர் மருதமுத்து சோனாடு கொண்டார் (73) கூறுகையில்,
இந்த கிராமங்களில் எல்லாம் கடைசியாக கடந்த 1954ம் வருடம் தான் தீபாவளி கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது கிடையாது
இதற்கு காரணம், 1955ம் ஆண்டுக்கு முன் தற்போது உள்ளது குறுவை சாகுபடி கிடையாது. ஒருபோக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர். அந்த நேரத்தில் தான் தீபாவளி பண்டிகை வந்தது.
இதற்காக துணி, பலகாரம் வாங்க பணமில்லாமல் பல இடங்களில் அநியாய வட்டிக்கு வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். பின்னர் அந்த கடனை அடைக்க முடியாமல் திணறினர். அதில் பல குடும்பங்கள் அழிந்தன.
அன்றிலிருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இது தான் ஊர் கட்டுப்பாடு. அது மட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகை தமிழர் திருநாள் கிடையாது. பொங்கல் தான் நம் பண்டிகை. தீபாவளி அன்று ஊர்க் கட்டுப்பாட்டை மீறுவருக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படும். இதனால் தான் இந்த கிராம பகுதிகளிலிருந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்கள் தீபாவளி சீரும் கேட்பதில்லை என்றார்.
மிக வித்தியாசமான கிராமங்கள்..