பி.இ: நுழைவுத் தேர்வு ரத்தானதால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பலன்
சென்னை: பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது நுழைவுத் தேர்வு முறை. ஆனால் இந்த நுழைவுத் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக சமீப காலமாக சர்ச்சை எழுந்தது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து திமுக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பலன் அடைந்துள்ளார்களா?. அடைந்துள்ளனர் என்று கூறுகிறார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதம் அதிகம். நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதே இதற்குக் காரணம் என்றார் அவர்.
தொடர்ந்து அவர் கூறுகையில், செல்போன்களுக்குத் தடை விதித்திருப்பதால் பல பலன்கள் ஏற்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது நேரத்தை வீணடிப்பதில்லை. சைபர் கிரைம்' பிரச்னை இல்லை. மாணவர்கள் நுாலகங்களிலும், கம்ப்யூட்டர் ஆய்வுக் கூடங்களிலும் செலவிடுவதால் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.
இதேபோல, கலை, அறிவியல் கல்லூரிகளிலும் செல்போன்களுக்குத் தடை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு நாம் இதை செய்ய வேண்டும்.
அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து 65 பேராசிரியர்களும், 20 மாணவர்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவை தற்போது தான் அதிக பலன்களை தர துவங்கியுள்ளன. 20 ஆண்டுகளில் இதன் முழு பயனும் தெரிய வரும்.
கோவை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார் விஸ்வநாதன்.