யுஎஸ் 'ஷாப்பிங் மால்களை' தாக்க அல்-கொய்தா திட்டம்
வாஷிங்டன்: கிருஸ்துமஸை ஒட்டி சிகாகோ மற்றும் லாஸ் ஏன்ஜெலஸ் பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்களில் (வர்த்தக வளாகங்கள்) தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம் தீட்டியிருப்பதாக எப்பிஐ (FBI) எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக எப்பிஐக்கு கடந்த செப்டம்பரிலேயே தகவல் கிடைத்துவிட்டதாக ஏபிசி டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கண்காணிப்பையும் பாதுகாப்பையும் அதிகரிக்குமாறு அந்தப் பகுதி போலீசார் மற்றும் மால் உரிமையாளர்களை எப்பிஐ அறிவுருத்தியுள்ளது.
குண்டு மிரட்டல்-விமானத்தில் சோதனை:
இதற்கிடையே இன்று சிகாக்கோவில் இருந்து நியூயார்க் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடுகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி தகவலையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
லா கார்டியா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 117 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், சோதனையிட்டபோது அதில் குண்டு ஏதும் இல்லை.
இத்தாலி: யுஎஸ் ஹெலிகாப்டர் விழுந்து 4 பேர் பலி:
இதற்கிடையே இத்தாலியில் அமெரிக்க ராணுவத்தின் பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமைடந்தனர்.
ட்ரெவிஸோ என்ற இடத்தில் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. கீழே விழுந்ததில் அது இரண்டாக உடைந்துவிட்டது.