நெல்லையப்பர் கோவில் குளத்தில் விஷம் கலந்ததாக பரபரப்பு
திருநெல்வேலி: நெல்லை டவுண் நெல்லையப்பர் கோவில் தெப்ப குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
நெல்லை டவுண், நயினார்குளம் அருகே எஸ்.என். நெடுஞ்சாலையில் நெல்லையப்பர் கோவில் தெப்பகுளம் உள்ளது. இந்த தெப்பகுளத்திற்கு திருநெல்வேலி கால்வாய் மூலம் தண்ணீர் வந்து நிரம்பும். இதில் ஆண்டுதோறும் குறுக்குதுறை கோவில் தெப்ப உற்சாகம் நடக்கும்.
இந்த குளம் தற்போது பராமரிப்பு இல்லாமல் பாசி பிடித்து காணப்படுகிறது. மேலும் தெப்பகுளத்தை சுற்றிலும் மக்கள் மல, ஜலம், கழிப்பதால் மிகவும் அசுத்தமாக உள்ளது.
தெப்பகுள நீரில் பல அரிய வகை மீன்கள் உள்ளன. இந்த மீன்கள் ஒரு கிலோ அளவு எடை கொண்டவை. மேலும் கொக்கு, நாரை உள்பட பல பறவைகளும் இந்த குளத்தில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குளத்தில் உள்ளத மீன்கள் திடீரென செத்து மிதக்க ஆரம்பித்துள்ளது. இந்த மீன்களை சாப்பிட்ட 3 நாரைகளும் செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது.
சாக்கடை கழிவு நீர் குளத்தில் கலந்ததால் இந்த நிலை ஏற்பட்டதா, அல்லது அந்த பகுதி பொதுமக்கள் குளத்தில் வீசி எறியும் கழிவு பொருட்களில் ஏதேனும் விஷ தன்மை உடைய பொருட்கள் சேர்ந்ததால் மீன்கள் இறந்தனவா அல்லது விஷம் தண்ணீரில் கலந்ததால் மீன்கள் செத்ததா என்று பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த தெப்பகுளத்தில் கடந்த 2 நாட்களாக மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதை இதுவரை மாநகராட்சி சுகாதார அதிகாரிகளோ, அல்லது கோவில் நிர்வாகமோ கண்டு கொள்ளவும் இல்லை, இதை அப்புறபடுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.