முதல்வர் வீட்டருகே சந்தேகமான வகையில் நடமாட்டம்- 2 பேர் கைது
சென்னை: சென்னை கோபாலபுரதில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இருவர் பிடிபட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்த பரபரப்பு அடங்குவதற்குள் இச் சம்பவம் நடந்துள்ளது.
நேற்று காலை மர்ம நபர் ஒருவர் கருணாநிதியின் வீட்டின் முன்பு ஸ்கூட்டரில் சுற்றினார். அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்த அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த பாபு சந்திரசேகர் (வயது 33) என தெரியவந்தது. போதையில் தள்ளாடிய அந்த நபர், நான் முதல்வருக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வந்தேன். ஏராளமான போலீசார் நின்றதால் பயந்து போய் இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.
மேற்கொண்டு விசாரணைக்காக அந்த நபர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் நேற்று முன் தினம் கருணாநிதியின் சி.ஐ.டி. காலனி இல்லத்தின் முன் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சிக்கி மாட்டியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த அந்த நபரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பினார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த பத்மநாபன் என்று தெரிய வந்தது. சிஐடி காலனி பகுதியில் உள்ள ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு வேலையை விட்டு நீக்கி விட்டதால் மீண்டும் வேலை கேட்க வந்ததாகவும் போலீசாரிடம் அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் பத்மநாபனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவரது தந்தையிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந் நிலையில் மீண்டும் நேற்று காலை பத்மநாபன் சந்தேகமான வகையில் முதல்வர் வீட்டருகே மீண்டும் சுற்றி வந்தார்.
இதையடுத்து போலீசார் அவரை மீண்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications