மம்தா பந்த்: வன்முறை - முடங்கியது மேற்கு வங்கம்
கொல்கத்தா: மேற்குவங்கம் நந்திகிராமில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆங்காங்கு வன்முறையும் நடந்தது.
நந்திகிராமில் நடந்த கலவரத்தை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியோர் இன்று ஒருநாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
இன்று காலை 6 மணிக்கு துவங்கிய பந்த்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் மேற்குவங்கம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை.
ஒரு சில இடங்களில் மட்டும் அரசு பேருந்துகள் முழு பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. பல இடங்களில் பஸ் மறியல், ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் நடந்தது. பந்த் அறிவிக்கப்பட்ட பின்னரும் அரசு பேருந்து இயக்கப்பட்டதால் இன்று அதிகாலையில் மத்திய கொல்கத்தா அருகே பேருந்து தீவைத்து கொளுத்தப்பட்டது.
புறநகர் செல்லும் ரயில்கள், பேருந்துகள் எதுவும் பாதுகாப்பு கருதி இயக்கப்படவில்லை. இதனால் வெளியூருக்கு செல்லமுடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கிடையே நந்திகிராமில் இன்றும் விவசாயிகளுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
இந்த மோதலில் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று இதுவரை தெரியவில்லை.
நந்திகிராம் கலவரத்தை அடக்க சி.ஆர்.பி.எஃப் போலீசார் 1,000 பேரை மத்திய அரசு அனுப்பி வைத்தது. அவர்களில் 300 பேர் நந்திகிராம் சென்றனர். ஆனால் அவர்களை கலவரம் நடந்த இடத்திற்கு செல்லவிடாமல் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி விரட்டி விட்டனர்.
கவர்னர் - முன்னாள் முதல்வர் சந்திப்பு:
மேற்குவங்க கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி அம்மாநில முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மேற்குவங்கம் முழு அடைப்பு தொடர்பாக இருவரும் பேசியதாக தெரிகிறது.
டெல்லியில் நடக்கவிருக்கும் சிபிஐ(எம்) பொலிட்பீரோ கூட்டத்தில் நந்திகிராம் பிரச்சனை தொடர்பாகவும், அந்த கிராமத்தின் வளர்ச்சி குறித்தும் ஜோதிபாசு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications