'பரிகாரம்' தேட நாய்க்கு தாலி கட்டிய வாலிபர்!
மானாமதுரை: தனக்கு ஏற்பட்ட தோஷம் விலக பரிகாரத்திற்காக நாய்க்கு தாலி கட்டி அதை வாலிபர் ஒருவர் மனைவியாக்கிக் கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள விலாக்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(33). கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் உல்லாசத்தின் உச்சியில் இருந்த 2 நாய்களை அடித்துக் கொன்று மரத்தில் தொங்க விட்டுள்ளார். அதன் பின்னர் செல்வகுமாருக்கு இரு கை, கால்கள் செயலற்று போய் காதும் கேட்காமல் போய்விட்டதாம்.
தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை ஒரு ஜோதிடரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், நீ சிறுவனாக இருந்த போது செய்த விளையாட்டுத்தனம் தான் உன்னை இந்தளவு ஆக்கிவிட்டது. இது இறந்த நாய்களின் சாபம் தான் எனவும், அதற்கு பரிகாரமாக ஏதாவது ஒரு நாயை நீ திருமணம் செய்து மனைவியாக்கி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன்படி தனது வீட்டின் அருகில் உள்ள பெண் நாயை அன்புடன் தினந்தோறும் உபசரித்து அதை செல்வி என்று செல்ல பெயர் வைத்து அன்பு காட்டியுள்ளார். ஜோதிடர் சொல்லியபடி செல்வியை(நாயின் பெயர்)திருமணம் செய்ய முடிவெடுத்தார் செல்வகுமார்.
அதன்படி செல்விக்கும், செல்வகுமாருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. செல்விக்கு சேலை கட்டி ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள கணபதி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் செல்வியின் கழுத்தில் செல்வகுமார் தாலி கட்டி இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இந்த திருமணத்திற்கு பின்னர் அப்பகுதி மக்களுக்கு தடபுடலாக அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. மணமகள் செல்விக்கு பன் கொடுக்கப்பட்டது.
நான் செய்த பாவத்துக்காக பரிகாரம் செய்துள்ளேன். எனது மனைவி செல்வியை என் வாழ்நாள் வரை பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று செல்வகுமார் கூறியது தான் அனைவரையும் அதிரச் செய்தது.
நாயை வாலிபர் திருமணம் செய்த சம்பவம் மானாமதுரை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications