அரிசி கடத்தல்- சிபிஐ விசாரணை கோரும் விஜயகாந்த்
சென்னை: தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வெள்ளம் போல பாயும் கடத்தல் அரிசி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏழைகளுக்கு இரண்டு ரூபாயில் ஒரு கிலோ அரிசி எனக்கூறி திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் உண்மையில் ரேஷன் அரிசி எங்கே போகிறது என்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அரிசி, விழுப்புரம் வழியாக புதுச்சேரிக்கு கொண்டுவரப்படுகிறது. அங்குள்ள கிடங்குகளில் பதுக்கப்பட்டு, ரயில்கள் மூலம் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளுக்கு வங்கிகளும் கோடிக் கணக்கில் கடன் வழங்குகின்றன. இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் மூலம், ஆண்டுக்கு 1,170 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். உணவுத் துறைக்கு தெரியாமல் ரேஷன் அரிசி கடத்தப்பட வாய்ப்பில்லை.
தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வெள்ளம் போல கடத்தல் அரிசி பாயும் போது, சோதனைச் சாவடி போலீசார் எங்கே போயினர். ரயிலில் கொண்டு செல்ல பல விதிமுறைகள் இருக்கும்போது, டன் கணக்கில் அரிசி கடத்துவது ரயில்வே துறைக்குத் தெரியாமல் இருக்காது.
மாணவர்கள் படிக்க பண உதவி கேட்டால் மறுக்கும் வங்கிகள், எந்த முகாந்திரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாயை, கடத்தல்காரர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தக் கடத்தலுக்கு வங்கிகளும் உடந்தை என்பது புலனாகிறது.
இந்த அரிசி கடத்தலில், திமுக அரசு, ரயில்வே துறை, வங்கிகள் மற்றும் இவற்றின் பின்னணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
ரேஷன் அரிசியை நம்பி பிழைக்கும் எத்தனையோ ஏழைகளுக்கு, மலிவு விலையில் அரிசி வழங்கும் திட்டத்தைக் கூட ஊழல் பெருச்சாளிகள் விட்டு வைக்கவில்லை. பச்சிளம் குழந்தைக்குத் தர வேண்டிய பால், பாம்புக்கு வார்க்கப்படுகிறது.
ஓயாமல் உழைப்பதாகச் சொல்லி கொள்பவர்கள், ஊழலுக்கு ஓய்வு தந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications