வாரணாசியிலிருந்தும் இனி ஹஜ் பயணம்!
டெல்லி: கோவில் மாநகரமான வாரணாசியிலிருந்தும் ஹஜ் யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், கோவில் நகரான வாரணாசி, இந்தியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளப்படும் நகர்களின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரைத் தலங்களில் வாரணாசி 16வது நகரமாக சேர்ந்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வார்கள். உலகிலேயே அதிக அளவிலான ஹஜ் யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்துதான் செல்கிறார்கள்.
இந்த ஆண்டு முதல் ஹஜ் யாத்ரீகர்கள் எங்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள், எங்கு தங்கியுள்ளனர் என்பதை நமது நாட்டிலிருந்தபடி அறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அவர்களின் குடும்பத்தினர், தங்களது குடும்பத்தினர் எங்கு உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையதளம் மூலமாக பயணிகளின் நடமாட்டம் குறித்து அறிய முடியும். தங்களது குடும்பத்தினருடன் இங்கிருந்தபடியே பேசவும் வசதி செய்யப்படும்.
இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் வசதிக்காக 506 நிர்வாக மற்றும் மருத்துவப் பணியாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் ஜெட்டாவிலிருந்தபடி செயல்படுவார்கள். இந்திய யாத்ரீகர்களுக்குத் தேவையான உதவிகளை இவர்கள் செய்வார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications