சென்னை மருத்துவமனையில் வெடிகுண்டு பீதி!
சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு போல இருந்த தீபாவளி வெடியால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாநகரில், அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் உள்ளது. தினசரி ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை, மருத்துவமனையில் உள்ள பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதியில், ஒரு பை கிடந்தது. கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பையால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்குள் மஞ்சள் நிறத்தில் பெரிய உருண்டையான பொருளும் இருந்தது.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து பையைக் கைப்பற்றி சோதனை போட்டனர். அப்போது பையில் இருந்தது நாட்டு வெடிகுண்டு போலக் காணப்பட்டது.
இதையடுத்து அதை, தாம்பரத்தை அடுத்த ஊனமாஞ்சேரிக்குப் போலீஸார் கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர். அப்போது அது வானில் போய் வெடித்து பூப் போல கீழே வந்து விழுந்தது. இதையடுத்து அது வெடிகுண்டு இல்லை என்றும் நாட்டு வெடிகுண்டு உருவத்தில் தயாரிக்கப்பட்ட தீபாவளி வெடி என்றும் போலீஸார் கண்டுபிடித்னர்.
இது எப்படி மருத்துவமனை வளாகத்தில் வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications