புதுச்சேரி சிறையில் கைதிகள் தொடர் உண்ணாவிரதம்
புதுச்சேரி: சிறைக் கண்காணிப்பாளரை மாற்றக் கோரி புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கடந்த 2005ம் ஆண்டு புதுச்சேரி சிறை வளாகத்திற்குள் விஷச் சாராயத்தை அருந்தி 3 கைதிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. கமிஷன் விசாரணையின்போது, 16 கைதிகளை சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் சித்திரவதை செய்ததாக கைதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கமிஷன் பரிந்துரைப்படி சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஜெயகாந்தன் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இதையடுத்து கைதிகளைப் பழி வாங்கும் வகையில் ஜெயகாந்தன் செயல்படுவதாக கூறி புதுவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
நேற்று 2வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில் சிறை கைதிகளுக்கு ஆதரவாக மத்திய சிறைக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications