ரேஷன் அரிசி கடத்தலில் சர்வதேச கும்பல் தொடர்பு?
தூத்துக்குடி&விருதுநகர்: தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச கும்பல் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து தூத்துக்குடிதான் பெரிய துறைமுகம். இங்கிருந்து தினமும் கப்பல்களில் வெளிநாடுகளுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த சரக்குகளுடன் ரேஷன் அரிசிகளும் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது சிவில் சப்ளை அதிகாரிகள் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்வதும், அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு அரிசியை கடத்தி சென்று விடுகிறார்கள்.
இந் நிலையில் தூத்துக்குடி பைபாஸ் ரோடு மீன்வளக்கல்லூரி அருகில் உள்ள ஒரு குடோன் முன் ரேஷன் அரிசிகளுடன் 4 லாரிகள் நிற்பதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சிவில் சப்ளை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில்
லாரியில் 1750 அரிசி மூட்டையும், குடோனில் 750 மூட்டையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசி மூட்டைகள் அனைத்திலும் மயில் பிராண்ட் என்று முத்திரை பதிக்கப்பட்டதுடன், உயர் ரக அரிசி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்டதாக போலி ரசீதுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தமிழக ரேஷன் அரிசியை மூட்டைகளில் அடைத்து தூத்துக்குடியில் வைத்து பாலீஸ் செய்து அதனை இலங்கை உட்பட வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்தது தெரியவந்தது.
இதுபோன்ற ரேஷன் அரிசி கடத்தலுக்கு சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. சிவில் சப்ளை அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில் தற்போது சுங்க இலாகாவினரும் இந்த அரிசி கடத்தல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல விருநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையிலும் 190 மூட்டை ரேஷன் அரிசி பிடிபட்டுள்ளது.
விருநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ராஜீவ்நகர் அருகே தாசில்தார் பார்த்தீபன், மாவட்ட வழங்கல் அதிகாரி உள்ளிட்டோர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கிய அதிகாரிகள் லாரி டிரைவர், கிளீனரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக லாரி டிரைவரும், கிளீனரும் பதில் அளித்தனர். இதனால் மேலும் சந்தேகம் வழுத்து லாரியை சோதனை செய்த போது அதில் 190 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து டிரைவர், கிளீனர் இருவரும் தப்பி ஒடிவிட்டனர். பறிமுதல் செய்த லாரியை நுகர் பொருள் வாணிப கழகத்திடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.