அனைத்து வீரர்களையும் கெளரவிக்கும் தமிழக அரசு- அமைச்சர்
திருநெல்வேலி: தமிழக அரசு மட்டும் தான் அனைத்து விளையாட்டு வீரர்களையும் கெளரவித்து வருகிறது என்று தமிழக விளையாட்டு மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சர் மைதீன்கான் கூறியுள்ளார்.
பாளையங்கோட்டையில் பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை விழாவில் அமைச்சர் மைதீன்கான் பேசியதாவது,
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் தவிர பிற விளையாட்டு வீரர்கள் கெளரவிக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே அனைத்து விளையாட்டு வீரர்களும் கெளரவிக்கப்படுகின்றனர்.
தமிழக அரசு கிரிக்கெட், செஸ் மற்றும் கபடி உட்பட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சமீபத்தில் பரிசு வழங்கியது. இதனையறிந்த கர்நாடக அரசு உடனடியாக தமிழக அரசை பின்பற்றி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு வழங்கியது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் பாய்ந்தன. இதனால் பலர் வேலை இழந்து போகும் அபாயம் ஏற்பட்டது.
அவர்களின் சலுகைகள் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அவர்களின் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நன்றி கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தினால் மட்டும் போதும்.
சேது கால்வாய் திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் மாநிலங்களில் தமிழகம் பொருளாதார ரீதியாக முதல் இடத்தில் வளர்ச்சியடையும். இதன் முலம் தமிழக அனைத்து மக்களுக்கும் பயன் உண்டாகும். இதனை நிறைவேற்றிட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications