மதுரையில் ரூ. 1 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்-ஆட்டோ டிரைவர்களுக்கு வலை
மதுரை: மதுரையில் ரூ. 1 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான். அவனைக் கடத்தியது ஆட்டோ டிரைவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கோபிநாதன். இவரது மகன் ஸ்ரீதரன் (15)9ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வீட்டு முன் ஸ்ரீதரன் நின்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை ஆட்டோவில் இழுத்துப் போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர்.
இதையடுத்து கோபிநாதன் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையில் கோபிநாதனின் வீட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், உன் மகனை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 1 லட்சம் தர வேண்டும்.
பணத்தை வண்டியூர் கண்மாய் பகுதிக்கு உடனே கொண்டு வா. இதுபற்றி போலீசுக்கு தெரிவித்தாலோ அல்லது பணம் தராவிட்டாலோ உன் மகனை உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டிவிட்டு போனை துண்டித்து விட்டனர்.
இந்தத் தகவலையும் கோபிநாதன் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து பணத்துடன் கோவிநாதனை வண்டியூர் பகுதிக்கு அனுப்பிய போலீசார் உதவி கமிஷனர் குமாரவேலு, தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் தலைமையில் அந்தப் பகுதியை ரகசியமாக கண்காணித்தனர்.
பணத்தை வாங்க வந்த கும்பல் அங்கு போலீசார் பதுங்கியிருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டு கடத்தப்பட்ட ஸ்ரீதரனை விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்தக் கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
அப்போது தெப்பகுளம் பகுதியில் 3 ஆட்டோ டிரைவர்கள் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இந்தக் கும்பல் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications