சேது திட்டம் கைவிடப்படுகிறது-சொல்கிறார் சு.சுவாமி

சேது சமுத்திரத் திட்டத்தால் ராமர் பாலம் பாதிக்கப்படும். எனவே இதை மேற்கொள்ளக் கூடாது என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள், இந்து அமைப்புகள் உள்ளிட்டவை கோரி வருகின்றன. பல்வேறு வகையான போராட்டங்களிலும் குதித்துள்ளன.
இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ராமர் பாலத்தைக் காக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன.
இதையடுத்து ராமர் பாலத்தை உடைக்காமல் இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்பது குறித்து ஆராய கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த நிலையில் சேது சமுத்திரத் திட்டம் ரத்தாகப் போவதாக சுப்ரமணியன் சுவாமி புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர், சேது சமுத்திரத் திட்டம் விரைவில் ரத்து ஆகும் என என்னிடம் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை கைவிட மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
மேலும் மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். விரைவில் இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என்றார் சுவாமி.
முதல்வர் கருணாநிதி, விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டது குறித்து சுவாமி கூறுகையில், இது சட்டத்தை மீறிய செயல். உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுவேன்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கேரள அரசு புதிய அணை கட்டுவது தேவையற்றது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications