மருத்துவ மாணவர்களுக்காக அதிமுக போராட்டம்: ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை தற்போது உள்ள ஐந்தரை ஆண்டுகள் என்பதிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு முயன்று வருகிறது. இது ஏழை மாணவர்களையும், பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் முன்பு 27ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சென்னை, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, தேனி, சேலம், கன்னியாகுமரி, பெருந்துரை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் முன்பு நடத்தப்படும் போராட்டத்தில் அதிமுக முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தப் போராட்டத்தில் அதிமுகவினருடன், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஹவுஸ் சர்ஜன்கள், பொது மக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மத்திய அரசு தற்போது எடுத்துள்ள ஆறரை ஆண்டு கால படிப்பு என்ற புதிய முடிவால், மேல் படிப்பையெல்லாம் முடித்து முழுமையான மருத்துவராக ஒரு மாணவர் உருவாக வேண்டுமானால் அவருக்கு வயது முப்பதைக் கடந்து விடும்.
ஆனால் அதேசமயம், பொறியியல் படிப்பைப் படிக்கும் மாணவர்கள் 24 அல்லது 25 வயதுக்குள் படிப்பை முடித்து மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை ஊதியம் பெறும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள்.
இதன் காரணமாகவே மருத்துவக் கல்லூரி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் படிப்புக் காலத்தை உயர்த்துவதை கடுமையாக எதிர்க்கிறார்கள். தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் வேதனையுடன் உள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை குறிப்பாக பிற்பட்ட மற்றும் நலிவடைந்த சமுதாயத்தைச் சேரந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் சேர முன்வர மாட்டார்கள். பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே சேரும் நிலை உருவாகும்.
கட்டாய ஊரகச் சேவை என்பதை, படிப்பை முடித்தவுடன் மாணவர்களை அரசு டாக்டர்களாக நியமிக்க மத்திய அரசு முன்வந்தால் அதைச் செய்ய மாணவர்கள் தயக்கம் காட்ட மாட்டார்கள். விருப்பத்துடன் ஊரகச் சேவையை செய்ய அவர்கள் முன்வருவார்கள்.
எனவே கட்டாய ஊரகச் சேவை என்ற திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications