முஷாரப்பின் அவசர நிலை பிரகடனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது செல்லும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் அவசர நிலையை பிரகடனம் செய்ததை எதிர்த்து டிக்கா இக்பால் முகம்மது கான் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவசர நிலை பிரகடனம் செல்லாது, அதன் பின்னர் அதிபர் முஷாரப் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கான் கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இந்த பெஞ்ச் அளித்த தீர்ப்பில், நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்த காரணத்தால்தான் இந்த கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தது. தீவிரவாத செயல்கள் தலைவிரித்தாடின. குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. எனவேதான் நிலைமையை சரி செய்ய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவசரமாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் செளகத் அஜீஸ், அதிபர் முஷாரப்புக் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்தே அதிபர் அவசர நிலையை அமல்படுத்தினார்.
ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களான நீதித்துறை, அரசியலமைப்பு, அரசு நிர்வாகம் உள்ளிட்டவை முற்றிலும் செயலிழந்த காரணத்தால்தான் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. எனவே இந்த நடவடிக்கை செல்லும்.
ஜனநாயகத்தை மீண்டும் தழைக்கச் செய்யும் வகையில் நேர்மையான முறையில், நியாயமான வழிகளில் தேர்தலை நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications