மலேசியாவில் போராட்டம் நடத்திய இந்தியர்கள் மீது தடியடி
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு இன்று காலை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டனர்.
மலேசியாவில் தாங்கள் 2ம் தர குடிமக்களாக நடத்தப்படுவதைக் கண்டித்தும், தங்களது இந்த நிலைக்கு இங்கிலாந்து அரசுதான் காரணம், அவர்கள் தங்களை மலேசியாவில் குடியேற்றிய பின்னர் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இங்கிலாந்தின் நடவடிக்கையால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு இழப்பீடு கோரியும் மனு கொடுக்க அவர்கள் திரண்டிருந்தனர்.
இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தைத் தவிர்க்குமாறு மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தியர்கள் அதை நிராகரித்து விட்டனர். 
உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு திரண்ட இந்தியர்களை மலேசியப் போலீஸார், தூதரகத்திற்கு 100 மீட்டர் தொலைவிலேயே தடுத்து நிறுத்தினர். ஆனால் அதை மீறி மனு கொடுக்க இந்தியர்கள் முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதலில் இறங்கினர். இதில் பல இந்தியர்கள் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தால் கோலாலம்பூரில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications