டெல்லியில் நிலநடுக்கம் - மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம்

தலைநகர் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லி முழுவதும் அதிர்ந்தது.
வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. அதிகாலை நேரம் என்பதால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் வீடுகள் ஆடுவதைப் பார்த்து அதிர்ந்து போய் வெளியே ஓடி வந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.
பிறகுதான் நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனால்தான் வீடுகள் குலுங்கியுள்ளன என்பது தெரிய வந்தது. இதையடுத்து பீதியில் ஆழ்ந்த மக்கள் வீடுகளுக்குப் போகாமல் வெளியிலேயே இருந்தனர்.
டெல்லியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஆனால் நிலநடுக்கப் பீதி காரணமாக அதிகாலையில் கொட்டிய கடும் பனியையும் பொருட்படுத்தாமல் மக்கள் நெடு நேரம் வெளியிலேயே செலவிட்டனர்.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டராகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி தவிர ஹரியாணாவின் பல பகுதிகள், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூகம்பத்தின் மையம், டெல்லி - ஹரியாணா இடையே இருந்தது.












Click it and Unblock the Notifications