2010ம் ஆண்டுக்குள் புகையில்லா சென்னை - அன்புமணி உறுதி
சென்னை: 2010ம் ஆண்டுக்குள் சென்னை மாநகரம் புகையில்லா நகரம் என்ற பெருமையை அடையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு கூட்டணி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புகையில்லா உலகம் என்ற சிடியை அன்புமணி வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தை 2012ம் ஆண்டுக்குள் புகையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்வேன். அதேபோல 2010ம் ஆண்டுக்குள் சென்னை நகரம் புகையில்லாத நகரமாக மாற்றப்படும்.
டெல்லி, மும்பை மாநகரங்களையும் புகையில்லா நகரங்களாக மாற்ற டெல்லி, மகாராஷ்டிர மாநில முதல்வர்கள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதையும், புகை பிடிப்பதையும் தடுக்க தேசிய அளவிலான திட்டத்தை மத்திய அரசு தீட்டியுள்ளது. இதன் மூலம் புகை பிடிப்பவர்களைத் தடுக்கவும், பிடிக்கவும், காவல்துறையினர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் ரூ. 2000 வரை அபராதம் வசூலிக்கப்படும். பொது இடங்களில் புகை பிடிப்பது, புகையிலை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் புகையிலை சார்ந்த பொருட்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. அப்படி இருக்கையில் வளரும் நாடுகளிலும் இது சாத்தியமானதுதான். சாதாரண நாடான வங்கதேசத்திலேயே புகை பிடிப்பது குறைந்து விட்டது. நம்மால் அது முடியாதா?. சட்டீஸ்கர் மாநிலம் புகையில்லாத மாநிலமாக மாறி வரும் நிலையில் சென்னையாலும் அதை சாதிக்க முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications