பாகிஸ்தானில் அச்சடித்த கள்ள நோட்டு தமிழகத்தில் புழக்கம்!
சேலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் கிளையில் இருந்து பழைய 100 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டன. இந்த வங்கிகளை பரிசோதித்த ரிசர்வ் வங்கி அதில் 24 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது.
இது போன்ற கள்ள நோட்டுகள் தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கலாம் என்பதால் அனைத்து வங்கிகளையும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கிக்கு வந்த கள்ள நோட்டுகளை இணைத்து சேலம் மாநகர காவல் துறை ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் மாநகர காவல்துறை ஆணையர் கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் நகரில் கள்ளநோட்டுகள் நடமாட்டம் குறித்த தகவல்களும், புகாரும் வந்துள்ளன. கள்ள நோட்டுகள் பார்ப்பதற்கு உண்மையான நோட்டுகள் போல இருப்பதால் அதை பொது மக்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஒரு பக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாகிஸ்தான், மறுபக்கம் இதுபோல பெருமளவில் கள்ள நோட்டுக்களையும் உலவ விட்டு இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும் செயலில் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.