ஏழைகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக இ.கம்யூ. புகார்

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏழைகளுக்காக தமிழக அரசு வழங்கும் இலவச நிலம் மற்றும் இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். தவறு செய்யும் அதிகாரிகள் மீது அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
அரிசிக்கு ரூ. 1000 ஆதார விலையை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் நாளை நடத்தும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மாணவர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும். பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண முயல வேண்டும்.
ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது. திருவாரூரில் திமுக செயலாளரும், செங்கல்பட்டில் இரண்டு அதிமுகவினரும் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சமூக விரோதிகள், ரவுடிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு மிகச் சரியான நடவடிக்கை.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதைத் தீர்க்க தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி சென்னையில் தொடங்கும். தேசியத் தலைவர்களான ஏ.பி.பர்தான், டி.ராஜா, குருதாஸ் தாஸ் குப்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர் என்றார் தா.பாண்டியன்.












Click it and Unblock the Notifications