கோ ஆப்டெக்ஸ் ஜவுளிக் கடையில் தீ - ரூ.80 லட்சம் நாசம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமாகின.
திருவண்ணாமலை திருவூடல் தெருவில் தமிழக அரசுக்கு சொந்தமான கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி நிறுவனம் உள்ளது. பூட்டியிருந்த இந்தக் கடைக்குள் இருந்து நேற்று காலை 8 மணியளவில் புகை வந்தது.
இதைப் பார்த்த, அந்த வழியாக கிரிவலம் சென்ற பக்தர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். மேலாளர் பாஸ்கரும் விரைந்து வந்து கடையை திறந்தார். அப்போது கடைக்குள் ஏராளமான துணிகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.
தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கடைக்குள் இருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள துணிகள் தீயில் எரிந்து நாசமாகின.
கடைக்குள் வைத்திருந்த ரொக்க பணம் ரூ.30,000 பெட்டகத்தில் இருந்ததால் எரியாமல் தப்பியது. தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
தீ விபத்து நடந்த கடையை உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, மாவட்ட ஆட்சித் தலைவர் சத்யபிரசாத் சாகு மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications