தேமுதிகவில் பாமக துணைத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன்
சென்னை: பாமக துணைத் தலைவரும், டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவரான சி.ஆர்.பாஸ்கரன் திடீரென தேமுதிகவில் இணைந்துள்ளார். இதனால் பாமக வட்டாரம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர். அவ்வப்போது முக்கியக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களும் இணைந்து அந்தந்த கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாமகவின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவருமான சி.ஆர்.பாஸ்கரன் தேமுதிகவில் இணைந்துள்ளார். இதனால் பாமக வட்டாரம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சி.ஆர்.பாஸ்கரன் முன்பு தமிழன் தொலைக்காட்சியில் செயல்பட்டு வந்தார். பின்னர் பாமக சார்பில் மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது அதில் முக்கிய பங்கு வகித்தார். நீதியின் குரல் என்ற நிகழ்ச்சியை அவர் நடத்தி வந்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிரடியாக தேமுதிகவில் இணைந்தார். தேமுதிக பொதுச் செயலாளர் ராமுவசந்தன் மற்றும் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அவர் தேமுதிகவில் இணைந்தார்.
தேமுதிகவில் இணைந்தது குறித்து பாஸ்கரன் கூறுகையில், மனித நேயம் மற்றும் ஜனநாயக உணர்வு கொண்ட அரசியல் தலைவராக விஜயகாந்த் இருப்பதால், அவரது நடவடிக்கைகள் கிராம மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.
பாமகவின் பலர் தேமுதிகவில் இணைந்த நிலையில், நான் சிறிது தாமதமாக வந்துள்ளேன். தொலைநோக்கு பார்வையுடன் 2011ம் ஆண்டில் ஆட்சி அமைப்பேன் என்று ராமதாஸ் கூறி வருவது சாத்தியமல்ல. 2011ல் ஆட்சி அமைக்கப் போவது விஜயகாந்த்தான். அவரால் மட்டுமே அது முடியும் என்றார் பாஸ்கரன்.
பாஸ்கரன் கடந்த சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது நினைவிருக்கலாம். அவர் தேமுதிகவில் இணைந்து விட்டதால் பாமக தரப்பு படு கடுப்புடன் உள்ளது.