குவைத்தில் இந்திய மசாஜ் பெண் கற்பழிப்பு
துபாய்: மசாஜ் செய்ய வருமாறு அழைக்கப்பட்ட இந்தியப் பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த சம்பவம் குவைத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவரது பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.
சம்பந்தப்பட்ட அந்தப் பெண் குவைத்தில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் மசாஜ் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று ஒருவர் மசாஜ் பெண்ணிடம் போனில் தொடர்பு கொண்டார். பெண் குரலில் அந்த நபர் பேசியதாக தெரிகிறது. உங்களது சேவை தேவைப்படுவதாக அந்த நபர் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் கூறிய முகவரிக்கு இந்திய மசாஜ் பெண் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபர், வீட்டுக்குள் அழைத்து எனது தாயாருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் திடீரென துப்பாக்கியைக் காட்டி, இந்தியப் பெண்ணை மிரட்டி, கற்பழித்து விட்டார் என்று அப்பெண் போலீஸில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருக்கிறார்.