மீண்டும் நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்
முஷாரப் ரத்தம் இல்லாத ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பின்னர், வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஷெரீப் சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக சவூதி, லண்டனில் தங்கியிருந்த ஷெரீப், சமீபத்தில் நாடு திரும்பினார். ஆனால் அவரை விமான நிலையத்தோடு பேக்கப் செய்து மீண்டும் சவூதிக்கே அனுப்பினார் முஷாரப்.
இந்த நிலையில் ஷெரீப்பை மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என சவூதி அரேபியா உள்ளிட்ட சில முஸ்லீம் நாடுகள் முஷாரப்பை நெருக்க ஆரம்பித்தன. மேலும், முஷாரப்பின் தூதர்கள் சிலரும் சவூதி சென்று ஷெரீப்பை சந்தித்துப் பேசினர். இதன் விளைவாக மீண்டும் ஷெரீப் நாடு திரும்ப முஷாரப் பச்சைக் கொடி காட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று இரவு ஷெரீப் நாடு திரும்பினார். சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா வழங்கிய சிறப்பு விமானத்தில், லாகூருக்கு வந்து சேர்ந்தார் ஷெரீப். மேலும், ஷெரீப் பயன்படுத்துவதற்காக ஒரு குண்டு துளைக்காத காரையும் சவூதி மன்னர் அனுப்பி வைத்துள்ளார்.
ஷெரீப்புடன் அவரது மனைவி குல்சும், தம்பி ஷாபாஷ் ஷெரீப் ஆகியோரும் உடன் வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடி வரவேற்றனர்.
போலீஸாரின் தடுப்பு அரண்களையும் தாண்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஷெரீப் விமான நிலைய விஐபி அறைப் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அவரது கட்சித் தலைவர்கள் கட்டித் தழுவி வரவேற்றனர்.
பிறகு விமான நிலையத்திற்கு வெளியே வந்த ஷெரீப் கூடியிருந்த தொண்டர்களிடையே பேசினார்.
முன்னதாக சவூதியிலிருந்து கிளம்பும் முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ஷெரீப் அளித்த பேட்டியில், இப்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை. இருந்தாலும் தேர்தலில் போட்டியிட முதலில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு அதை புறக்கணிப்பதா, இல்லையா என்பது குறித்து பிற கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும்.
முஷாரப்புடன் இணைந்து செயல்படும் பேச்சுக்கே இடமில்லை. ஜனவரி 8ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கேற்ற சூழ்நிலையை உருவாக்க அதிபர் முஷாரப் முயல வேண்டும்.
எந்த ஒப்பந்தத்தையும் செய்து கொண்டு நான் பாகிஸ்தான் வரவில்லை. எனக்கு அனைத்துமே பாகிஸ்தானும், அதன் மக்கள்தான். அவர்களுக்கு நான் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. பல கடமைகள் காத்துள்ளன. அதற்காகவே திரும்பி வந்திருக்கிறேன் என்றார் ஷெரீப்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக ஷெரீப் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.