தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு: டிஜிபி எச்சரிக்கை
சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடத்தினால் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் நடத்தியுள்ளனர். முதல்வர் கருணாநிதியும் இரங்கல் கவிதையை வெளியிட்டிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முத்தாய்ப்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதியை விமர்சித்து மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசப் போக தமிழகம் அவரது கொடும்பாவிகளை தூக்கில் போட்டும், எரித்தும் போராட்டம் நடந்து வருகிறது. இதைக் கண்டித்து காங்கிரஸாரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக டிஜிபி ராஜேந்திரன் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், உள்ளிருப்புக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துபவர்கள், ஆர்ப்பாட்டங்கள், உருவ பொம்மைகள் எரித்தல், சாலை மறியல் செய்தல் போன்ற போராட்டங்களில் ஈடுபடும் அமைப்புகள், தனி நபர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (1967) கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தல், சுவர் விளம்பரங்கள் செய்தல், கண்காட்சி நடத்துதல் மற்றும் எவ்வித ஆதரவு செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது.
மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடும் அச்சக உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொது இடங்களில் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.