ஜெயலலிதாவின் தைரியம்-மார்தட்டும் செங்கோட்டையன்
வேலூர்: ஆந்திர அரசு பாலாறு குறுக்கே அணை கட்டுவதை தட்டி கேட்கும் தைரியம் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
வேலூரில் அதிமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில்,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுகிறது. அதை தைரியத்துடன் தட்டிக் கேட்கும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கு தான் உள்ளது. மத்திய வனத்துறையின் அனுமதியின்றி பாலாற்றில் எப்படி அணை கட்டும் முயற்சி நடக்கிறது. 6ம் தேதி அடிக்கல் நாட்டப்போவதாக வேறு அறிவித்துள்ளனர். இதற்கு ஏன் இன்னும் தடை விதிக்கவில்லை.
அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா பாலாறு பிரச்சனையில் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பைகாரா மின் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வர முயன்றபோது, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சுற்றுச் சூழல் பாதிப்பு என காரணம் காட்டி தடுத்தார். இப்போது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாதது ஏன். பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதால் 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக் குறியாகிவிட்டது.
காவிரி பிரச்சனையில் பேசி தீர்க்க முடியாது என்பதால் உடனடியாக ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே போல வழக்கை விரைந்து நடத்தி பாலாற்றில் அணை கட்ட தடை உத்தரவு பெற வேண்டியது தானே.
தமிழகத்தில் இப்போது 2,700 குற்றவாளிகள், ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தனை நாட்களும் இவர்கள் தமிழகத்தில் நடமாடி வந்துள்ளனர். ஆனால் அரசு இப்போது தான் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications