கருணாநிதி தலையிடக் கூடாது-மலேசிய அமைச்சர்
கோலாலம்பூர்&சென்னை: மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி தலையிடக்கூடாது என்று மலேசிய நாட்டு நீதித்துறை அமைச்சர் நஸ்ரி அஜீஸ் கூறியுள்ளார்.
மலேசிய தமிழர்களின் நலன் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந் நிலையில் மலேசிய அமைச்சர் அஜீஸ் கூறுகையில்,
மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கருணாநிதி எதுவும் பேசாமல் கண்டிப்பாக விலகி இருப்பது தான் நல்லது. இந்த விவகாரத்தில் தலையிட இது ஒன்றும் தமிழ்நாடு கிடையாது, இது மலேசியா என்பதை அவர் முதலில் தெரிந்து கொள்ளட்டும்.
மலேசியாவில் நடந்த விவகாரம் குறித்து கூச்சல் போட்டுக் கொண்டு நாடாளுமன்றத்தில் திமுக கேபினட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார்கள்.
மலேசியாவின் நடவடிக்கை எப்போதும் கடுமையாகத் தான் இருக்கும். அதற்காக எங்கள் நாட்டைப் பற்றி யார் கடுமையாக பேசினாலும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நாங்கள் எங்களுடைய பணியை தான் செய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை முதலில் அவர் கவனிக்கட்டும், மலேசியா பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் என்றார்.
பதிலளிக்க கருணாநிதி மறுப்பு:
மலேசிய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்க முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. மலேசிய தமிழர்களின் இன்னல்களை பிரதமரின் கவனத்துக்கு ெகாண்டு போவது என் கடமை. அதை இந்த மாநில மக்களின் சார்பில் நான் செய்தேன். மற்றபடி அந்த நாட்டு அமைச்சருக்கு பதில் சொல்லி பிரச்சனையாக்க விரும்பவில்லை.
மலேசிய அரசுக்கு எதிராகக் கூட நான் ஏதும் சொல்லவில்லை. அந் நாட்டு தமிழர் நலனைக் காக்க வேண்டும் என்று தான் சொன்னேன் என்றார்.












Click it and Unblock the Notifications