மலேசியா குறித்த விவாதம்-ஒளிபரப்பை நிறுத்திய சபாநாயகர்

டெல்லி: மலேசிய தமிழர்களின் நிலை குறித்து மக்களவையில் விவாதம் நடந்தபோது அதை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தடை விதித்தார். இதையடுத்து ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும் அவையையும் 30 நிமிடம் ஒத்தி வைத்தார்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் எம்பியான கார்வேந்தன் இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார். அவர் பேசுகையில், மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் 15 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 85 சதவீதத்தினர் தமிழர்கள். மலேசியாவின் வளர்ச்சிக்காக உழைத்த இந்த மக்களை அந்த நாட்டு அரசு பாரபட்சமாக நடத்தி வருகிறது. மலேசிய தமிழர்களைக் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றார்.
பாஜக எம்பிக்கள் பேசுகையில், மலேசியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை. இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பிற தமிழக எம்பிக்கள் பேசுகையில், இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றனர்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, இன்னொரு நாட்டின் பிரச்சனை குறித்து இப்படி தரக் குறைவாக பேசக் கூடாது. மலேசியா நமக்கு மிக நட்பான நாடு. அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமைச்சருக்கு நான் உத்தரவிட முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்றார்.
இதனால் கொதித்த தமிழக எம்பிக்கள் மலேசிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த நிகழ்வுகளை மக்களவைத் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.
இதையடுத்து அந்த ஒளிபரப்பை நிறுத்த உத்தரவிட்டார் சாட்டஜி. இதனால் உறுப்பினர்களின் கோஷம் மேலும் வலுக்கவே அவையை அரை மணி நேரம் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications