ஆனந்த்துக்கு கிரிக்கெட் கிளப்பின் கெளரவ உறுப்பினர் பதவி
சென்னை: செஸ் மேதை விஸ்வநாதன் ஆனந்த்துக்கு, மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், கெளரவ உறுப்பினர் என்ற புதிய கெளரவத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது.
150 ஆண்டு கால வரலாறு கொண்டது மெட்ராஸ் கிரிக்கெட் கிளப். இத்தகைய பெருமை கொண்ட மெட்ராஸ் கிரிக்கெட் கிளப், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஆனந்த்துக்கு கெளரவ உறுப்பினர் பதவியை வழங்கத் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் 1ம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆனந்த்திடம் கெளர உறுப்பினர் பதவிக்கான அட்டை வழங்கப்படும்.
இதுகுறித்து கிளப்பின் தலைவர் எஸ்.கே.ஏ. மாணிக்கவாசகம் கூறுகையில், இதுபோன்ற கெளரவத்தை முன்பு சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோருக்கும், டென்னிஸ் வீரர் லியாண்டல் பயஸுக்கும் வழங்கியுள்ளோம். முதல் முறையாக செஸ் வீரர் ஒருவருக்கு தற்போது வழங்கவுள்ளோம்.
டிசம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கிளப் உறுப்பினர்களின் குழந்தைகள் 20 பேரோடு அதி வேக செஸ் போட்டியில் ஆனந்த் பங்கேற்கிறார். அவர்களுடன் கலந்துரையாடவும் செய்கிறார்.
அதன் பின்னர் கெளரவ உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் கிளப்பின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர் என்றார் மாணிக்கவாசகம்.