அடகு நகையை மீட்க 27 வருடங்களாக போராடும் அப்பாவிகள்!
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் 27 வருடங்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகள் கொள்ளை போய் விட்டதால் அவற்றை மீட்க முடியாமல் 22 பேர் போராடிக் கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோம்பைப்பட்டியை சேர்ந்தவர்கள் காளியப்பன், பழனிசாமி, ஆறுமுகம். இவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வாசுகியிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர்.
அதில், எங்கள் வீட்டு நகைகளை கணக்கன்பட்டி கூட்டுறவு வங்கியில் அடகு வைத்தோம். கணக்கன்பட்டி கூட்டுறவு வங்கியில் கடந்த 1980ம் ஆண்டு 204 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அதில் பாதிக்கப்பட்ட 140 பேருக்கு உரிய நகைகளைமீட்டுத் திருப்பி கொடுத்து விட்டனர். 22 பேருக்கு மட்டும், அவர்களுக்குரிய 64 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல் வங்கி காலம் தாழ்த்தி வருகிறது.
வங்கியில் போய் கேட்டால் மாவட்ட கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கேட்க சொல்லி அனுப்புகின்றனர். அவர்களிடம் கேட்டால் அவர்கள் வங்கியில் போய் கேட்கச் சொல்லுகின்றனர்.
எங்களது நகைகளை மீட்க முடியாமல் கடந்த 27 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலகம், ஆகியவற்றிக்கு அலைந்து அலைந்து எங்கள் கால்கள் தேய்ந்து விட்டன. எங்களில் சிலர் வங்கியின் செயல்பாடுகளை நினைத்து நகை கிடைக்காது என எண்ணி இறந்தே போய்விட்டனர். நகைக்கு உரிய பணமும், வட்டியையும் கட்டிவிட்டோம். இருப்பினும் எங்களுக்கு நகை கிடைக்கவில்லை.
எனவே எங்கள் நகைகளை மீட்டுத் தருமாறு வேண்டுகிறோம் என கூறியிருந்தனர். இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூறி கூட்டுறவு வங்கி இயக்குனருக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications