புரோக்கர் உதவியோடு மகனுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்த தாய்
மதுரை: மதுரையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த தாய், மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்கள் மதுரை சுப்பிரமணி-பரமேஸ்வரி தம்பதி. இவர்கள் மதுரை விளாங்குடியில் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் பாலமுருகன் (23).
பாலமுருகனின் பிறப்பு சான்றிதழில் இலங்கை அகதி என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அவரை பள்ளியில் சேர்ப்பதில் ஆரம்பித்து, பாஸ்போர்ட் வாங்குவது வரை பல சிக்கல்கள் எழுந்தன.
இந் நிலையில் சென்னை ஆவடியை சேர்ந்த புரோக்கர் ராமலிங்கத்தின் உதவியுடன் பாலமுருகனுக்கு போலியாக பாஸ்போர்ட் தயாரித்தார் தாய் பரமேஸ்வரி.
இந் நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற பாலமுருகன் தான் இந்தியன் தான் என்றும், அதற்கான சான்றாக பாஸ்போர்ட்டைக் காட்டியதோடு, தனது பிறப்பு சான்றிதழில் இலங்கை அகதி என்று தவறாக மாற்றி போடப்பட்டுள்ளதாகக் கூறி, அதை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
இந்த மனு மீது கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் பரமேஸ்வரி மகனுக்காக போலியாக பாஸ்போர்ட், பள்ளி சான்றிதழ் ஆகியவற்றை தயார் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் பரமேஸ்வரி, அவரது மகன் பாலமுருகன் மற்றும் புரோக்கர் ராமலிங்கம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.