காஞ்சீபுரம் அருகே பஸ்கள் மோதல்: 8 பேர் பலி
காஞ்சீபுரத்திலிருந்து திருத்தணிக்கு சென்ற அரசு பேருந்தும், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியிலிருந்து காஞ்சீபுரத்துக்கு வந்து கொண்டிருந்து தனியார் பேருந்தும், கூரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும், காஞ்சீபுரம் போலீசாரும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர். இவர்களுக்கு துணையாக அப்பகுதி கிராம மக்களும் மீட்பு பணிகளில் உதவி செய்தனர்.
இந்த விபத்தால் இரண்டு பேருந்துகளில் இருந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காஞ்சீபுரம் மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதேபோல் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர்.
இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் பலியானவர்களின் விபரம்:
அரசு பேருந்து டிரைவர் முருகன்(34), தனியார் பேருந்து டிரைவர் சோமு(44), மலர் மன்னன்(17), அம்புஜம்(30), பத்மா(35), கோபால்(33), துர்கா(14) ஆகியோர் ஆவர். இந்த விபத்தில் இறந்த மேலும் ஒருவர் குறித்த விபரம் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, பின்னர் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினர்.
இந்த விபத்தால் காஞ்சீபுரம்-திருத்தணி சாலையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.