மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர்

கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார்.
மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.
இந்தியாவின் இந்த கருத்துக்கு மலேசியா வெளியுறவு அமைச்சர் அல்பார் கண்டனம் ெதரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தி ஸ்டார் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தினால் நல்லது. மலேசியர்கள் குறித்தும், மலேசிய விவகாரங்கள் குறித்தும் அது கவலைப்படத் தேவையில்லை.
எங்களது நாட்டுப் பிரச்சினைகள் குறித்து, எங்களது நாட்டுச் சட்டப்படி நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.
இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய அரசு, இந்தியர்கள் குறித்துக் கவலை தெரிவித்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அவர்கள் மலேசிய குடிமக்கள் குறித்துக் கவலைப்படுகிறார்கள். அது தவறானது.
மலேசிய குடிமக்களாக இருப்பவர்கள் - அவர்கள் எந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சரி - மலேசியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்.
இந்தியாவில் இருப்பவர்களை விட மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நன்றாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.
சட்டத்தை மீறி நடக்க முயன்றால், நாங்கள் அதை தடுக்கத்தான் செய்வோம்.
மலேசியாவில் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். எனவே இனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் பிரச்சனை எழுப்பினால் மலேசியா சிதறிவிடும் என்று கூறியுள்ளார் அல்பார்.












Click it and Unblock the Notifications