பாலாறு அணை: அடிக்கல் நாட்டு விழாவை திடீரென ரத்து செய்த ஆந்திரம்
குப்பம் (ஆந்திரா): ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர அரசு ரத்து செய்து விட்டதாக தெரிகிறது.
சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 6ம் தேதி முதல்வர் ராஜசேகர ரெட்டி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மதிமுக சார்பில் வேலூரில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர அரசு ரத்து செய்து விட்டதாக தெரிகிறது. முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நிகழ்ச்சி நிரலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி இடம் பெறவில்லை.
தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாகவே அடிக்கல் நாட்டு விழா ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.