சென்னையில் 10 தினங்களில் அனைவருக்கும் இலவச டிவி-ஸ்டாலின்
சென்னை: சென்னையில் எல்லாத் தொகுதிகளுக்கும் இன்னும் 10 தினங்களில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்படும் என்று மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் இலவச கலர் டிவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் இலவச கலர் டிவி வழங்கப்படும் என சொல்லி இருந்தோம். ஆட்சிக்கு வந்ததும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளன்று இந்த திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 30,000 கலர் டிவிக்கள் சமத்துவபுரம் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரூ.685 கோடி செலவில் 25 லட்சம் டிவிக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 27ம் தேதி முதல்வர் இலவச கலர் டிவிக்களை வழங்கினார். இதில் சென்னையில் மட்டும் 41,838 பேருக்கு இந்த டிவிக்கள் வழங்கப்படுகிறது.
சேப்பாக்கத்தில் 3,124 டிவிக்களும், திருவல்லிக்கேணி பகுதியில் 1,937 டிவிக்களும் வழங்கப்பட்டன. இப்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் 2,550 டிவிக்கள் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இன்னும் 10 தினங்களுக்குள் 41,838 டிவிக்கள் வழங்கப்பட்டுவிடும்.
3வது கட்டமாக 30 லட்சம் கலர் டிவிக்கள் வழங்க ரூ.780 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டதில் ரூ.162 கோடி அரசுக்கு மிச்சமானது. அந்த பணத்திலும் 4 லட்சத்து 25 ஆயிரம் டிவிக்கள் வாங்கிக் கொடுக்க உள்ளோம். 3வது கட்டமாக 34 லட்சத்து 25 ஆயிரம் டிவிக்கள் வழங்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.