பெரியாறு: கருணாநிதி-அச்சுதானந்தன் பேச பிரதமர் ஏற்பாடு

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே உள்ள அணைக்குப் பதில் புதிய அணை கட்ட கேரள அரசு முயன்று வருகிறது. அதற்கான அலுவலகத்தையும் அது குமுளியில் திறந்துள்ளது.
கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை புறம் தள்ளி கேரள அரசு செயல்படுவதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தலையிட்டு சமரசம் செய்து வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், பிரதமரிடம் முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக விவாதித்தேன். அப்போது, வருகிற 19ம் தேதி டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டின்போது தமிழக, கேரள முதல்வர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வார் என்றும் அவர் தெரிவித்தார் என்றார் அச்சுதானந்தன்.












Click it and Unblock the Notifications