அரியலூரில் கொசு ஒழிப்பு பணியில் 2,000 மாணவர்கள்
அரியலூர்: அரியலூரில் கொசு ஒழிப்புப் பணியில் 2,000 மாணவர்கள் சமூக ஈடுபாட்டுடன் இறங்கியுள்ளனர்.
அரியலூரில் கடந்த சில தினங்களாக மக்கள் சிக் குன்-குனியா, டெங்கு போன்ற நோய்களால் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொசு ஒழிப்பு பணியில் மாணவர்களை ஈடுபடுத்த நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன் பேரில் கொசு ஒழிப்புப் பணியில் மாணவர்கள் ஈடுபட நகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. நகராட்சியின் இந்த அழைப்பை 2,000 பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.
இவர்கள் சுத்தமான நீரில் மட்டும் வாழும் ஏடீஸ் கொசுக்களை அழிக்க அரியலூர் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் தேங்கியுள்ள கொசு புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நகர்மன்ற தலைவர் விஜயலட்சுமி, தனது 7வது வார்டில் கொசு ஒழிப்பு பணியை துவக்கி வைத்தார். அரியலூரில் உள்ள 18 வார்டுகளில் உள்ள 127 தெருக்களில் உள்ள வீடுகளுக்கு தனித்தனி குழுவாக சென்ற மாணவ மாணவிகள் வீடுகளில் உள்ள உடைந்த பாட்டில்கள், டயர், தண்ணீர் தேங்கும் பாத்திரங்களை தேடி தேடி அழித்தனர். இந்த சமுதாய பணியில் மாணவ மாணவிகள் எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.












Click it and Unblock the Notifications