பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு-800 பேர் கைது
சென்னை: நாளை (டிசம்பர் 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் சென்னை உள்பட அனைத்து நகர்களிலும், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும், இரவு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷ்னர்கள் ரவி, பாலசுப்பிரமணியன், துரைராஜ் ஆகியோரின் நேரடி மேற்பார்வை அனைத்து துணை கமிஷ்னர்களும் நேரடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலையங்கள், வர்த்தக வளாகங்கள், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்கள் ஆகிய மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான 35 செக்போஸ்ட்டுகள் தவிர கூடுதலாக மேலும் 15 செக் போஸ்ட்டுகள் சென்னையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.
பழைய குற்றவாளிகள், வன்முறையைத் தூண்டுவோர் என சுமார் 800 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ரயில் தண்டவாளங்கள், மேம்பாலங்களிலும் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது. ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.
தலைமைச் செயலகம், துறைமுகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதே போல கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகர்கள் அனைத்திலும் சோதனைகள் தீவிரமாகியுள்ளன.