கருணாகரனை மீண்டும் சேர்க்க சோனியா பச்சைக் கொடி
டெல்லி: முன்னாள் கேரள முதல்வரும், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சி நடத்தி, நடத்த முடியாமல் முடங்கியுள்ளவருமான கருணாகரனை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பச்சைக் கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.
91 வயதாகும் கருணாகரன், கேரள அரசியலின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் இருந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையுட்ட ஏற்பட்ட கருத்து மோதலால் கட்சியிலிருந்து விலகி புதுக் கட்சியைத் தொடங்கினார்.
ஆனால் இவரது கட்சியால் கேரள அரசியலில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணையத் திட்டமிட்டுள்ளார் கருணாகரன்.
இதுதொடர்பாக கருணாகரன் தரப்பிலிருந்து சோனியா காந்திக்கு கோரிக்கை சென்றது. 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்து கருணாகரன் அறிவித்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் சோனியா காந்திக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பினார்.
அதில், கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகவும், கட்சித் தலைமை மீது நம்பிக்கை கொள்வதாகவும் கூறியிருந்தார் கருணாகரன்.
இதுகுறித்து கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
கருணாகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க கேரள காங்கிரஸ் தரப்பில் சம்மதம் தெரிவித்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து கருணாகரனை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார்.
குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் கருணாகரன் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பும் விழா நடைபெறும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications