பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை-ராஜசேகர ரெட்டி
குப்பம்: பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசு செய்து வந்தது. ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களும் நடத்தி வந்தன.
இதனை தொடர்ந்து புதிய அணைக்கான அடிக்கல் நாட்டு விழா முதல்வர் ராஜசேகர ரெட்டி தலைமையில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மத்திய வனத்துறையினரின் அனுமதி கிடைக்காததால் விழா ரத்து செய்யப்பட்டதாக சித்தூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிலையில் குப்பத்தில் நடந்த ஒரு விழாவில் ராஜசேகர ரெட்டி பேசியதாவது,
குப்பம் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், விவசாயிகள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கணேசபுரத்தில் ஒரு சிறிய திட்டம் மூலம் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முடியு செய்யப்பட்டது.
அதன்படி இந்த திட்டத்தை ரூ. 57 கோடியில் துவக்க இருந்தோம். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே இந்தப் பிரச்சனையை பெரியதாக்கி விட்டனர். இந்த திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதே நேரத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான வனத்துறை பகுதியில் அணை கட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல் உள்ளது.
இருப்பினும் குப்பம் பகுதி மக்கள் நலன் கருதி இன்னும் 2 வாரத்தில் வனப்பகுதி அல்லாத இடத்தில் முதல் கட்டமாக அணை கட்டும் பணிகள் தொடங்கி திட்டமிட்டப்படி பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் பணி நடைபெறும்.
அதன் பின்னர் வனத்துறை அனுமதியும், உச்சநீதிமன்ற உத்தரவும் பெற்று முழுமையான பணிகள் முடிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications