விமர்சனங்களை கருணாநிதி அணுகும் முறைக்கு ராமதாஸ் பாராட்டு
கடலூர்: திமுக அரசு மீதான பாமகவின் விமர்சனங்களை, ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்துக் கொள்வதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் தனது தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், எனது விமர்சனங்களை ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்துக் கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், அதிகாரங்களில் இருப்பவர்களும் இதேபோன்ற அணுகுமுறையைத்தான் கொண்டிருக்க வேண்டும்.
அரசைக் குற்றம்சாட்ட வேண்டும் என்று நாங்கள் குறை கூறுவதில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டுதான் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறோம்.
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. டாக்டர்கள் மட்டுமல்லாது, மருந்தக ஊழியர்கள், நர்சுகள் போன்ற பணியிடங்களும் பெருமளவில் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்பக் கோரியும், அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்யக் கோரியும் டிசம்பர் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு ஆற்ப்பாட்டம் நடத்தப்படும்.
மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் புற்றீசல் போல பெருகி விட்டன. ஆனால் இவற்றால் கிராமப்புற மக்களுக்கும், ஏழைகளுக்கும் எந்தப் பலனும் இல்லை. பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் தரமான மருத்துவ சேவை, கிராமத்தினருக்கும், ஏழைகளுக்கும் கிடைப்பதில்லை. இவை கிடைக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும். அங்கு தற்போதுள்ள வசதிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.
கல்வி வரி என்று வசூலிக்கப்படும் தொகையை கல்விப்பணிக்காக மட்டுமே செலவிட வேண்டும். சென்னை மாநகராட்சி கடந்த 2006-07ம் ஆண்டில், கல்வி வரியாக ரூ. 60.3 கோடியை வசூலித்துள்ளது. இதில் ரூ. 24 கோடியை மட்டுமே கல்விப்பணிக்காக செலவிட்டுள்ளது. மற்ற மாநகராட்சிகளிலும் இதே நிலைதான். இது மாற வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications