ராமர் என்று யாரும் வாழ்ந்ததில்லை-புத்ததேவ்
கொல்கத்தா: ராமர் என்று யாரும் வாழ்ந்ததில்லை. கவிஞர்களின் கற்பனை பாத்திரம் தான் ராமர் என்று மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடந்த கண்டன கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ராமர் என்று யாரும் வாழ்ந்தது கிடையாது. கவிஞர்களின் கற்பனை பாத்திரம் தான் ராமர்.
கடலில் ராமர் கட்டியதாக கூறப்படும் பாலமும் உண்மை கிடையாது. இது இயற்கையாக அமைந்தது தான். பொருளாதார வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டம் வழி வகுக்கும். ஆனால் அதை மதக் காரணங்களை காட்டி சங்பரிவார் அமைப்புகள் எதிர்க்கின்றன என்றார்.
பாஜக கண்டனம்:
புத்ததேவின் பேச்சுக்கு மேற்கு வங்க பாஜக செயலர் ராகுல் சின்கா கூறுகையில், நந்திகிராம வன்முறையில் மார்க்சிஸ்ட் அரசு மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதனால் முஸ்லிம்களின் ஆதரவை பெறும் நோக்கில் ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்று புத்ததேவ் கூறுகிறார்.
அவர்களுக்கு காரல் மார்க்சும், ஸ்டாலினும் தான் தெரியும். சுவாமி விவேகானந்தரை கூட போலி சாமியார் என்று சொல்வார்கள். இந்தியா மீது கம்யூனிஸ்ட்களுக்கு பற்று கிடையாது. அவர்களுக்கு ரஷ்யாவும், சீனாவும் தான் முக்கியம் என்றார் சின்கா.












Click it and Unblock the Notifications