பொன்னையாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரா திட்டம்
வேலூர்: பாலாற்றில் அணை கட்ட தீவிரமாக இருக்கும் ஆந்திர அரசு அடுத்து பொன்னையாற்றையும் குறி வைத்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே ரூ. 25 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட ஆந்திரா தீர்மானித்துள்ளது. இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட தீவிரமாக உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 6ம் தேதி நடத்தப்படவிருந்தது.
ஆனால் தமிழகத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த அடிக்கல் நாட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தமிழகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அடுத்த நடவடிக்கையில் ஆந்திரா இறங்கியுள்ளது.
திருப்பதி அருகே உள்ள சேஷாசலத்தில் உற்பத்தியாகி, சித்தூர் வழியாக வேலூரில் நுழைந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாயும் பொன்னையாற்றின் குறுக்கே ரூ. 25 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட ஆந்திரா தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
பொன்னையாற்றிலிருந்துதான் வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 120 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள 9000 ஏக்கர் பாசன நிலங்களும் பொன்னையாற்றி நம்பித்தான் உள்ளன.
இந்த நிலையில் பொன்னையாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டத் தீர்மானித்திருப்பதால் வட மாவட்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications