'ராமநாதபுர கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இல்லை'
ராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்ட கடலோரப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் இல்லை என்று உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய இடங்களில் ஏராளமான தீவுகள் உள்ளன. இந்த தீவுப்பகுதிகளில் விடுதலைப்புலிகள் இரவு நேரங்களில் அதிகமாக நடமாடுவதாகவும், அங்கு ஆயுதங்களை பதுக்கி வைத்து கடத்தி செல்வதாகவும் புலானாய்வுதுறை சிறப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கீழக்கரை பகுதியிலிருந்து படகில் சென்று தீவுகளில் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு விடுதலைப்புலிகள் வந்து சென்றதற்கோ, ஆயுதங்கள் பதுக்கி வைத்ததற்கோ எந்த தடயமும் கிடைக்காததால் அவர்கள் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் கீழக்கரை பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து உயர் அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் சோதனையிட்டனர்.
இதுகுறித்து உளவுப் பிரிவு போலீஸ் தரப்பில் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள், உளவுத்துறை, சுங்கத்துறை அதிகாரிகள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கீழக்கரை உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் விடுதலைப்புலிகள் யாரும் ஊடுருவியிருப்பதாக தெரியவில்லை. அந்தளவுக்கு மாவட்ட கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் தவறானதாகும்.
இருப்பினும் அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதால் இலங்கையிலிருந்து வரும் அகதிகள் ஒவ்வொருவரும் தீவிர விசாரணைக்கு பின்னரே முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 15 சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கடற்பகுதியில் அதி நவீன கருவிகளுடன் கடற்படை போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் விடுதலைப்புலிகள் ஊடுருவ வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications